இயக்குநர் பா.ரஞ்சித், நம்பத்தகுந்த நபர் கிடையாது என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சனம் செய்து உள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளதாவது:-
ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் போது எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் எங்கு சென்றோம். இரங்கல் கூட்டம் நடத்த மாநகராட்சி ஆணையரிடம் எங்கள் தலைவர் திருமாவளவன் பேசினார். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை பயன்படுத்தி பா.ரஞ்சித் தனது செயல்பாட்டை கொண்டு வர நினைக்கிறார்.
பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக வழக்கறிஞர் மலர்கொடி, தாமக பொறுப்பாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பா.ரஞ்சித் நடத்திய பேரணியில், பாஜக, அதிமுகவுக்கு தொடர்பு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். ஆனால் அதில் கூட அங்கு திமுகவைதான் விமர்சிக்கிறார். இதில் அரசியல் நோக்கம் உள்ளது. இதில் பா.ரஞ்சித்துக்கு ஒரு நோக்கம் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.
திமுகவில் இருக்கும் மேயர் பிரியா மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை பேரணி நடத்துவதற்கு முன்பாக சந்தித்து பேசி அழைத்த பின்னர், அவர்கள் பேரணிக்கு வரவில்லை என்றால் அவர்களை அம்பலப்படுத்துங்கள். தான் பேரணி நடத்துவது தொடர்பாக பா.ரஞ்சித், எங்கள் தலைவர் திருமாவளவனிடம் எதுவுமே கலந்தாலோசிக்கவில்லை. நீங்க இப்போதுதானே வந்து உள்ளீர்கள், பா.ரஞ்சித் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல. இந்த அலுவலகத்திற்கு வெற்றி மாறன் உள்ளிட்ட எல்லா தலைவர்களும் இங்கு வந்து உள்ளனர். ஆனால் இங்கு இதுவரை வராத ஒரே நபர் பா.ரஞ்சித்தான்.
குஜராத் மாநிலத்தில் வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானியை அழைத்து பா.ரஞ்சித் சென்னையில் நிகழ்ச்சி நடத்தினார். மறுநாள் விசிக அலுவலகத்திற்கு அவர் வருவதாக இருந்தார். அன்றைய தினம் ஜிக்னேஷ் மேவானி மட்டும்தான் வந்தாரே தவிர, பா.ரஞ்சித் வரவில்லை. எங்கள் தலைவர் திருமாவளவனை சந்திப்பதில் பா.ரஞ்சித் ஏன் பாகுபாடு காட்டுகின்றார். ஒரு இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றால் எங்களுடன் ஒரு உறவில் இருக்க வேண்டும். கருத்து ஒற்றுமை இருக்க வேண்டும். அப்போதுதான் வருவார்கள். நீங்களாகவே அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, வாங்க என்றால் எப்படி. இது என்ன சினிமாவா, வாங்க என்றால் எல்லா அசிஸ்டெண்ட் டைரக்டர்களும் வருவதற்கு, இது ஒரு போராட்டம்தானே, நீங்கள் அழைத்து இருக்க வேண்டாமா?.
’அண்ணன் திருமாவளவனிடம் சொல்கிறேன்’ உங்களை யாரும் கைவிடமாட்டோம் என்று பா.ரஞ்சித் கூறி உள்ளர். இது தலைவரை மட்டுமில்லை, இந்த இயக்கத்தை அவமானப்படுத்தும் பேச்சாக நான் பார்க்கிறேன்.
ஒரு சினிமாவில் நுழையும் அசிஸ்டெண்ட் டைரக்டர், ரஞ்சித்தை பார்த்து நான் உங்களை கைவிடமாட்டேன் என்று சொல்வது எப்படி இருக்கும். பா.ரஞ்சித் யார்?, அவர் கைவிடுவதற்கு. உங்கள் உயரம் என்ன என்பதை தெரிந்துவிட்டு பேச வேண்டும்.
பா.ரஞ்சித் நம்பத்தகுந்த நபர் அல்ல, அவர் அட்டகத்தி படம் முடித்த பிறகு, மெட்ராஸ் படத்தை எடுத்தார். படம் ரிலீஸ்க்கு தயார் ஆன போது திடீர் என வழக்கு போடப்பட்டது. கோபிநாயினாரின் ’கருப்பர் நகரம்’ படத்தின் கதைத்தான் மெட்ராஸ் என்று நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. என்னுடைய நண்பர் மடிப்பாக்கம் வெற்றி செல்வனுக்கு பா.ரஞ்சித் நண்பர் ஆவார். அவர் மூலம் எனக்கு அவர் அறிமுகம் ஆனார். கிண்டியில் உள்ள லிமெரிடியன் ஹோட்டலில் இது குறித்து அவரை அழைத்து வந்து பேசினார்.
அப்போது ரஞ்சித், “படத்தை முடித்துவிட்டோம், வழக்கை எப்படியாவது வாபஸ் வாங்க சொல்லுங்கள்” என்று கூறினார். நான் வழக்கு போட்டவர்கள் தரப்பில் வரசொல்லி பேசி, வழக்கை திரும்ப பெற சொன்னேன். விடுதலை சிறுத்தைகளின் பேச்சை கேட்டுவிட்டு வழக்கை திரும்ப பெற்றதன் காரணமாகத்தான் மெட்ராஸ் படம் வந்தது. இவ்வளவு பெரிய உதவியை நாங்கள் அவருக்கு செய்து உள்ளோம். ஆனால் எங்களிடம் அவர் எந்த உறவையும் காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
