மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: சசிகலா

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய சசிகலா, மின் விநியோகத்தையும் தங்கு தடையின்றி வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள், உடனே வாபஸ் பெற வேண்டும் என்றும் என்று வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. அதேபோல மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.

இந்த சூழலில் சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திமுக அரசு தனது நிர்வாக திறமையின்மையால் மின் வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரிகட்டுவதற்கு, ஏழை, எளிய, சாமானிய மக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

2006 முதல் 2011 வரை நடைபெற்ற அன்றைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் மின் வாரியத்தை சீரழித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக அன்றைய திமுக அமைச்சரே, மின் வெட்டு துறை அமைச்சர் என்று அழைக்கப்பட்டார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தனது நிர்வாக திறமையால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார்.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 2022 ஆம் ஆண்டு 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதம் வரை மின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான மக்கள் அதிலிருந்து மீளமுடியாமல் போராடி வருகிறார்கள். தற்போது திமுக அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

மாதம் ஒருமுறை மின் கணக்கீடு என திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு திமுக தலைமையிலான அரசு அதனை ஏன் இன்னும் செய்யவில்லை. திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையால் தற்போது மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வெளியிலிருந்து வாங்குவதால் மின் வாரியத்திற்கு மேலும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மின் வாரியத்திற்கு தற்போது ரூபாய்.1,60,000 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக தெரிய வருகிறது. திமுக ஆட்சி முடியும்வரை மின் வாரியம் அதன் சரிவிலிருந்து மீளவே முடியாது என்பது தெளிவாக புரிகிறது. எனவே தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை தடையின்றி வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.