தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்கும் திமுக: அண்ணாமலை!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்பதாகவும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுக்க கட்டாயப்படுத்துவதாக அந்த நிறுவனத்தின் பான் கார்டுடன் தமிழக அண்ணாமலை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் முதன்முறையாக இரவு நேர பார்முலா நான்கு கால்பந்தயத்தை சென்னையில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது. டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையே கார்பந்தயத்தை சென்னை நகருக்குள் நடத்த தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தனியார் நிறுவனம் நடத்தும் இந்த பந்தயத்தால் தமிழ்நாடு அரசுக்கு எந்த நன்மையும் கிடைக்காது எனவும், ஆனால் தமிழக அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பந்தயம் நடக்கும் பகுதியில் அரசு மருத்துவமனை இருப்பதால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதோடு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என மனுவில் கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் கடுமையான புயல் மழை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பார்முலா நான்கு கார்பந்தயம் தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு கூறியது. மேலும் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயத்தை ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்து கூட தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் அண்ணா சாலையில் பார்முலா நான்கு கால்பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவுத் தொடரில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்தொடல் வரை இந்த பந்தயம் நடக்கவுள்ளது இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்பதாகவும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுக்க கட்டாயப்படுத்துவதாக அந்த நிறுவனத்தின் பான் கார்டுடன் தமிழக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இந்த F4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர் திரு உதயநிதியின் கனவுத் திட்டமாகும், கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே ₹40 கோடி செலவிட்டுள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும், உதயநிதியின் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக் கனவுகளை நனவாக்க, நிதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், ₹25,000 முதல் ₹1,00,00,000 வரை வசூல் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்கும் நிதி வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது. இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான திரு அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல. இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

பொதுமக்கள் கடினமாக உழைத்துச் சேர்க்கும் பணத்தை, திமுக அரசு எப்படிக் கொள்ளையடிக்கிறது என்பதைத் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும். தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைத் திரு உதயநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.