மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள்: அண்ணாமலை!

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவினர் மீதான அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார் அண்ணாமலை.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசிய பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை கைது செய்தனர். இன்று காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டிற்கு சென்று அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதோடு, போலீஸ் அதிகாரியிடமும் வாக்குவாதம் செய்த நிலையில், கபிலன் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவினர் மீதான அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார் அண்ணாமலை. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:-

வடசென்னை மேற்கு பாஜக மாவட்டத் தலைவர் திரு. கபிலன் அவர்களைத் தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.