குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி அல்லி எச்சரித்துள்ளார்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆகஸ்ட் 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வாக உள்ளதால் இந்த மனுவை எண்ணிடுவதற்காக தலைமை நீதிபதி முன்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் அதுவரை குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

எத்தனை முறை வாய்ப்பளிப்பது என கேள்வி எழுப்பிய நீதிபதி மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கருதி குற்றச்சாட்டுப் பதிவை எப்படி தள்ளிவைக்க முடியும் என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, புதிய மனு குறித்து வாதிட அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி குற்றச்சாட்டுப் பதிவை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி, அதாவது இன்றைக்கு செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் வைத்தது. உச்ச நீதிமன்ற வழக்குக்கும், இந்த குற்றச்சாட்டு பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் தெரிவித்தார். இதையடுத்து ஏன் ஆஜர்படுத்தவில்லை என புழல் சிறை நிர்வாகத்துக்கு தொலைபேசி வாயிலாக கேட்டார் நீதிபதி அல்லி. உடல் நலக்குறைவு காரணமாக அவரை ஆஜர்படுத்த இயலவில்லை என சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காணொளிக்காட்சி மூலம் ஏன் குற்றச்சாட்டை பதிவு செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டுப் பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி நாளை நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொளிக் காட்சி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் எனவும் நீதிபதி எஸ்.அல்லி எச்சரித்துள்ளார். இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் 53வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.