வக்பு வாரிய சட்டத் திருத்தம் மனித இனத்திற்கே எதிரானது: கனிமொழி

வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. திமுக எம்பி கனிமொழி, “இந்த திருத்த சட்ட மசோதா, இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு மட்டுமல்லாது மனித இனத்திற்கே எதிரானது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாக தற்போதைய சட்ட பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தை திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல திருத்தங்கள் வக்பு வாரியத்திற்கு எதிரான, சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்கள் இடம்பெற முடியும் என்று யாராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

இந்த திருத்த சட்ட மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, “வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர். எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல” என்று கூறினார்.