திடீரென்று முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்?: சீமான்!

திடீரென்று முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்? உங்கள் கனவில் வந்து எனக்கு மாநாடு நடத்துங்கள் என முருகன் உதித்தாரா? உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து மாநாடு நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த முருகன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா இல்ல அல்லது சீமானுக்கு பயந்து செய்தீர்களா? நான் முருகன் வேலை தூக்கிய பின்பு தான் நீங்கள் முருகன் வேலை தூக்குகிறீர்கள். இவ்வளவு காலம் ஏன் முருகன் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? கனவில் வந்து யாரும் சொன்னார்களா? கல்வியை தரமாக கொடுங்கள். நன்கு படிப்பவர்களுக்கு தான் வேலை என்று சொல்லுங்கள். திராவிட மாடல் ஆட்சி, ராமர் ஆட்சியின் நீட்சி என்று அமைச்சர் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் கமிஷன் வாங்குவது தான் ராமர் ஆட்சி என்றால் இதைவிட ராமரை யாரும் கேவலப்படுத்த முடியாது.

சினிமாக்காரர்கள் என்றால் வாழ்வதற்கு வீட்டை கொடுக்க மாட்டார்கள். ஆள்வதற்கு நாட்டை கொடுப்பார்கள். மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையை மறித்து அந்த கார் ரேஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஒலிம்பிக்கில் இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு தங்கம் கூட வெல்ல முடியவில்லை. ஆர்வம் உள்ள பிள்ளைகளை வெளியில் கொண்டு வந்து அவர்களின் தனி திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும். சதுரங்க விளையாட்டு நூறு கோடி செலவில் நடத்தப்பட்டது. பிரதமர் வந்தார், அதனால் என்ன நடந்தது? சாலைகள் மோசமாக உள்ளது. மழை பெய்தால் தேங்கும் நிலையில் உள்ளது. இப்போது இந்த கார் பந்தயம் தேவையா? இவ்வாறு சீமான் கூறினார்.