வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி!

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் இந்தத் தாக்குதலுக்கு, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் கவலை அளிக்கிறது. எந்தவொரு நாகரிகமான சமுதாயத்திலும் மதம், சாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் நிகழும் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

வங்கதேசத்தின் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், அங்குள்ள் இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பாதுகாப்பையும் மரியாதையையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால அரசு உறுதி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.