கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சக மருத்துவர்கள் 4 பேருக்கு போலீஸ் சம்மன்!

பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக இளநிலை மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீஸார் விசாரணையை நாளைக்குள் முடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர். ஏற்கெனவே, முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொலை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் மருத்துவர்கள் அதேநேரம், கொல்கத்தா காவல்துறை கொலை வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் (நாளைக்குள்) முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்துள்ளனர். மருத்துவர்களோடு பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் ஆளும் திரிணமூல் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக ஜூனியர் மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். கொலை சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். இந்த நால்வரை தான் தற்போது போலீஸார் விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த நான்கு மருத்துவர்களும் சென்றபிறகு பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் என்பவர், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், மருத்துவக் கல்லூரி தலைமைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் உட்பட அனைவருக்கும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.