ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்யவேண்டும்: ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால் தான், இந்த தொழில் காலத்தை கடந்து நிற்கும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பங்களாதேஷ் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதும் எப்பொழுதெல்லாம் பங்களாதேஷத்தில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கமான உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவு மிகவும் முக்கியமானவை. இது மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜவுளி துறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருவது இந்த தொழில் வெற்றி பெறுவதற்கு இது உதவுவதாக அமையாது. ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால் தான் இந்த தொழில் காலத்தை கடந்தும் நிற்கும். உலகம் முழுவதும் ஜவுளி தொழில் வளர்ந்து வருகிறது. பங்களாதேஷில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளி தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது. பர்மாவில் கூட ஜவுளி புதிய எழுச்சியை ஏற்பட்டுள்ளது. நம்முடைய பகுதியை விட்டு ஜவுளி தொழில் வேறு நாட்டிற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது என்று நினைத்தால், மாநில அரசு ஜவுளி துறை சேர்ந்த அத்தனை பேரையும் அழைத்து அவர்களது குறைகளை முழுமையாக கேட்டு உரிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

போதை பொருள் ஒழிப்பு முதல்வர் பற்றிய கேள்விக்கு, போதை ஒழிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கஞ்சா அதிகமாக பிடிபட்டது என்றால் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என அர்த்தம். அதனை கட்டுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கஞ்சா இதர போதை வஸ்துகளை ஒழிக்க எடுக்கின்ற அத்தனை முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். மேலும் அனைவரும் வரவேற்க வேண்டும்.

பொன் மாணிக்கவேல் வழக்கு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, சிலை வழக்கு எந்த சூழலில் ஏற்பட்டது என தெரியவில்லை. எந்த அளவுக்கு முடிவு பெற்றுள்ளது என அனைத்தையும் பொருத்திருந்து பார்ப்போம்” இவ்வாறு தெரிவித்தார்.