வேதாரண்யம் மீனவர்களை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!

வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மகன் சந்திரகாசன் (70) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத் துறையில் இருந்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று (ஆக.13) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு 10.30 மணியளவில் இரண்டு படகுகளில் அங்குவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரிந்த 6 நபர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சூழ்ந்து கொண்டு அவர்களின் படகில் ஏறி நான்கு பேரையும் வாள்களை கழுத்தில் வைத்து மிரட்டியும், இரும்புப் பைப்புகளை கொண்டு தாக்கியும் உள்ளனர். அத்துடன், படகில் இருந்த 700 கிலோ வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, காயமடைந்த நான்கு மீனவர்களும் இன்று மதியம் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பினர். அவர்களின் முதுகின் பின்புறத்தில் இரும்பு பைப்பால் அடித்ததில் உள்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேதாரண்யம் மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை தமிழ் மீனவர்களால் தாக்கப்படுவது தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். அவர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடர்கிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாம்பனில் இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் ஆழமற்ற கடற்பகுதிகளில் நங்கூரமிடப்பட்ட்டுள்ளன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக ஆகஸ்ட் 20-ம் தேதி பாம்பன் பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.