வினேஷ் போகத் மனு தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது: பி.டி.உஷா!

வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது, ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிப்பதாக பி.டி.உஷா கூறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தத்தில், 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவின் வினேஷ் போகத் இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்க வீராங்கனையுடன் அவர், இறுதி போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருப்பினும், வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதி நீக்கத்தை எதிர்த்தும், வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரியும் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடத்திய நிலையில் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு இதன் தீர்ப்பு வெளியானது. இதில், வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பு அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது, ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிப்பதாக கூறி உள்ளார். வெறும் 100 கிராம் எடை அதிகரிப்புக்காக இறுதிப்போட்டி வரை வந்த வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விதி தேவையா என்பது குறித்து கூர்ந்து ஆராய வேண்டும். நாங்கள் வினேஷ் போகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். மேலும் இந்த சவாலான சூழலை நாங்கள் மக்களின் துணையுடன் கடந்து செல்வோம் என்று பிடி உஷா கூறியுள்ளார்.