பெண் டாக்டர் பலாத்காரம்: நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து!

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நவீன மருத்துவத்திற்கான டாக்டர்கள் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதன்படி, நாளை ஆகஸ்டு 17-ந்தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18-ந்தேதி காலை 6 மணி வரை சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என அறிக்கை தெரிவிக்கின்றது. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் பராமரிக்கப்படும். டாக்டர்களின் நியாயம் வாய்ந்த காரணங்களுக்கான தேசத்தின் இரக்கம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்களும் டாக்டர்களின் போராட்டத்தில் அவர்களுடன் கரம் கோர்க்கின்றனர்.

இந்நிலையில் நேற்று சிபிஐ, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. ஆனாலும் மருத்துவர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட்டம் காரணமாக மேற்கு வங்காளத்தில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் தொடங்கிய 5 நாட்களில் நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தின உரையில் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா ஐகோர்ட்டின் வழக்காட்டுதலின்படி, வழக்கு விசாரணைக்கு நான் ஒத்துழைப்பேன். ஆனால் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டம் தொடங்கி 5 நாட்கள் ஆகிறது. இதுவரை ஒரு சிறுவன், கர்ப்பிணிப்பெண் உள்பட 3 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். உங்கள் கால்களில் கூட விழ நான் தயாராக இருக்கிறேன். போராட்டத்தை தயவு செய்து கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.