உதயநிதி சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்?: எடப்பாடி பழனிச்சாமி!

தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்து முடிவுகள் வெளியான நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டுமென இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோரிக்கை குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணையச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். கடந்த ஆட்சியில் திமுக, நீட் தேர்வு தொடர்பாக அதிமுகவைக் கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் திமுகவுக்கு தெரியும்” என தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது சட்டமன்ற தேர்தல் முடிவில் பலமாக எதிரொலித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் அதிமுகவைப் போலவே திமுகவும், சட்டப் போராட்டம், சட்டசபையில் தீர்மானம் என வழக்கமான பாணி அரசியலையே செய்து வருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மாணவனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் விடியா திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணரவேண்டும்.

40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் விடியா அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.