மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தாவுக்கு ஹர்பஜன் சிங் கடிதம்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறைச் செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமல்ல, நமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான கடுமையான தாக்குதல் ஆகும். இது நம்முடைய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளின் பிரதிபலிப்பு ஆகும்.

நோயாளிகளின் உயிரை பாதுகாக்கக்கூடிய மருத்துவமனை வளாகத்திலேயே இதுபோன்ற கொடூரமான செயல் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி கேட்டு நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு முழு மனதுடன் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த மேற்கு வங்க அரசும் சிபிஐ அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.