விஜய்யை தெரியும்.. அவர் டார்லிங்: மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அவரிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவரிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அவர் கொடுத்த பதில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவிலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் வெண்கலம் வென்றார். இந்த ஒலிம்பிக் நாயகிக்கு நாடு முழுக்க இப்போது பாராட்டு விழாக்கள் நடந்து வருகிறது. அதன்படி சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனு பாக்கர் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பிரதமர் போனில் அழைத்துப் பாராட்டியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மனு பாக்கர், “பதக்கம் வென்றதற்காகப் பிரதமர் என்னை அழைத்துப் பாராட்டினார். வரும் காலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார். இது உண்மையில் எனக்குப் பெருமையான ஒரு தருணம். குறைந்தது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்றே நினைத்தேன். ஆனால் வெண்கலம் தான் கிடைத்தது. நூலிழையில் வெள்ளிப் பதக்கத்தைத் தவற விட்டது ஏமாற்றம் தான் என்றாலும் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டையும் சமாளித்தது எப்படி என்ற கேள்விக்கு அவர், “கல்வியை நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை.. துப்பாக்கி சுடுதலும் அதேபோலத் தான். கல்வி மற்றும் விளையாட்டைச் சரி சமமாகக் கையாள வேண்டும். நான் எவ்வளவு மார்க் வாங்குகிறேன் என்பதை எனது பெற்றோர் எப்போதும் கவனித்தார்கள். அவர்கள் கல்வி, விளையாட்டு என இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்தார்கள்” என்றார்.

தென்னிந்திய உணவு குறித்த கேள்விக்கு, “எனக்குப் பொங்கல் மிகவும் பிடிக்கும்.. அம்மா வீட்டில் தோசை சுடுவார்.. அது ரொம்பவே பிடிக்கும்” என்றார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினை தெரியுமா என்ற கேள்விக்கு, தெரியாது என்று பதில் அவர் பதிலளித்தார். அதேபோல தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை தெரியுமா என்ற கேள்விக்கு, “நன்றாகத் தெரியும்.. சமீபத்தில் தான் அவரை பார்த்துப் பேசினேன்” என்றார். பிறகு வினேஷ் போகத் குறித்துப் பேசிய மனு பாக்கர், “வினேஷ் எனக்கு அக்கா போன்றவர். அவரை எப்போதும் மரியாதையுடன் தான் பார்ப்பேன். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்துள்ளேன். பல சிரமங்களைக் கடந்து வந்தவர். அவர் இதையும் தாண்டி வருவார். இனியும் நிச்சயம் தொடர்ந்து முன்னேறுவார்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய்யை தெரியுமா என்ற கேள்விக்கு, “ஓ விஜய்யை தெரியும்.. அவர் டார்லிங்” என்று வெட்கத்துடன் பதிலளித்தார். அவரது இந்த க்யூட் ரியாக்ஷன் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.