நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற அமைத்த குழுவால் என்ன பயன்?: உயர் நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு அமைக்கும் குழுக்களால் என்னென்ன பயன்கள் என்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2004ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள், அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், அகற்றும் பணிகளை கண்காணிக்கவும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது? எத்தனை ஹெக்டேர் பரப்பு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? எனவும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அரசு குழுக்களால் என்ன பயன்? குழுக்கள் முறையாக கண்காணிக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கில் தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.