மக்கள் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது: அண்ணாமலை

மக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது என திமுக அரசை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்த வரை சென்னை மாநகரம் முதல் சிறிய கிராமங்கள் வரை மின்சார வசதி உள்ளது. அனைத்து வீடுகளுக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுக்க சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. சுமார் 60 லட்சம் இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு மின்வாரியம் ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாகக் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனைக் குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில், இரண்டு மின் இணைப்புகள் இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாகக் கருதி, மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறையில்,வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கு எப்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, “இரண்டு மின் இணைப்புகள் என்பது, பெயர் அடிப்படையிலா அல்லது முகவரி அடிப்படையிலா, எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கமும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார். இதனால், வாடகைக்குக் குடியிருப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுவதாகவும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

மேலும், “மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்று ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடுவதால், ஏற்கனவே 50 சதவிகிதம் அதிகமாக மின்கட்டணம் செலுத்தி வருகிறார்கள் பொதுமக்கள். தற்போது இந்த புதிய நடைமுறையில் உள்ள தெளிவின்மை காரணமாக மேலும் மின் கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். ஆகவே, இதனைத் தெளிவுபடுத்துவது தமிழக அரசின் கடமை” என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.