இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ்: பாஜக

“இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி. ஜம்மு காஷ்மீருக்கு ‘தனி கொடி’ என்ற தேசிய மாநாட்டு கட்சியின் அறிவிப்பை ஏற்றுக் கொள்கிறதா?” என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பிரிவினைவாத சிந்தனையோடு தேர்தலை சந்திக்கும் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. முரண்பட்ட கூட்டணியை அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். தேர்தலில் வெற்றி பெற்றால், ஜம்மு காஷ்மீருக்கு ‘தனி கொடி’ என்ற தேசிய மாநாட்டு கட்சியின் அறிவிப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறதா?

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிக்கையை காங்கிரஸ் ஒப்புக் கொள்கிறதா? பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? காஷ்மீரின் புகழ்பெற்ற இந்து புண்ணிய தலங்கள் இஸ்லாமிய பெயர்களால் மாற்றியமைக்கப்படும் என்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறதா?

ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதன் மர்மம் என்ன? இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லையென்றால் இந்தியாவை பிளக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஏன்? மதம், மொழி, சாதி ரீதியாக ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றத்தை காங்கிரஸ் கட்சி செய்து வருவதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.