மகளை பாலியல் வன்கொடுமை செய்த புரட்சி பாரதம் கட்சி மாநில தலைவர் கைது!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் புதுச்சேரி மாநில புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ரவி.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் நேற்று முன் தினம் இரவு தலையில் அடிபட்டதாக கூறி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தச் சிறுமியை முழு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிறப்புறுப்பு உட்பட உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. 6 வயது சிறுமிக்கு அவரது தந்தையான புதுச்சேரி புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகியான ரவி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

முதலில் அதனை மறுத்த ரவி பின்னர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், ரவி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமியின் தாய் அங்கன்வாடி பணியாளர் என்றும், அவர் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி ரவியின் இரண்டாவது மனைவி எனவும் தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.