நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு: டிடிவி.தினகரன் கண்டனம்!

நியாய விலைக்கடைகளில் மீண்டும் மீண்டும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு – சாமானிய பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான பருப்பு மற்றும் பாமாயிலுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நியாய விலைக்கடைகளில் பருப்பு, மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு எழுந்த நிலையில், அதனை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசால் ஏழை, எளிய பொதுமக்கள் தற்போது மீண்டும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு உயர்த்தப்படுவதோடு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வந்த பாமாயில் மற்றும் பருப்பு விநியோகத்தையும் நிறுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, பாமாயிலை வாங்குவதற்காக நியாய விலைக்கடைகளுக்கு வரும் சாமானிய மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையில், ஒரு சிலர் நியாய விலைக்கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, நியாயவிலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.