அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: பொன்முடி!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட முடிவு செய்திருப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆய்வறிக்கை கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணமும் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நடைமுறைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு பல்கலைக்கழகங்களின் வருவாயை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டன.

தேர்வுக் கட்டணங்களை லாபநோக்கத்துடன் உயர்த்துவது நியாயமில்லை என கண்டனங்கள் எழுந்தன. இளநிலை பொறியியல் பயிலும் மாணவர்கள் பருவத்துக்கு 9 தேர்வுகள் எழுத வேண்டும். ஒரு தாளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.75 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாணவரும் பருவத்திற்கு ரூ. 675, ஆண்டுக்கு ரூ.1350 கூடுதலாக செலுத்த வேண்டும். ஆண்டுக்கு தேர்வுக் கட்டணமாக மட்டும் ரூ.4050 செலுத்துவது என்பது பெரும் சுமையாகும். தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் வீதம் 4 ஆண்டுகளில் மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் இளநிலை பொறியியல் படிக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியது. அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் இந்த கட்டண உயர்வுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் கண்டித்தனர். இந்த நிலையில் இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது. சிண்டிகேட் மீண்டும் முடிவெடுக்கும் வரை தேர்வு கட்டணம் உயராது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பதாக பொன்முடி தெரிவித்தார்.