விஜய் கட்சி தொடங்கியதற்கு ராகுல் தான் காரணம்: விஜயதாரணி!

ராகுல் காந்தி கூறியதன் பிரதிபலிப்பாக தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று விஜயதாரணி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக உறுப்பினர் விஜயதாரணி கூறியதாவது:-

காங்கிரசில் கிடைத்த பொறுப்புகளை துறந்து பாஜகவில் இணைந்தேன். எம்எல்ஏ, தேசிய பொதுச்செயலாளர், முதன்மை கொறடா பொறுப்புகளை துறந்தேன். பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருக்கும் என சொல்லப்பட்டது. ஒரு மூத்த தலைவர் தனக்கு சீட்டு வேண்டுமென பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்டது.

ஆனாலும் மன வருத்தம் இன்றி பொன். ராதாகிருஷ்ணனுக்காக தேர்தலில் பணியாற்றினேன். தமிழகம் முழுவதும் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றினேன். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பொறுப்பு கேட்டேன். பாஜகவில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது. எனக்கும் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்.

ராகுல் காந்தி கூறிதான் விஜய் கட்சி ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் பொழுது காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி போன்ற பொறுப்பின் தலைவராக வேண்டுமென விஜய் விருப்பம் தெரிவித்தார். அப்போது, நீங்கள் தமிழகத்தில் அதிக செல்வாக்கு பெற்ற நடிகராக இருக்கும் நிலையில் தனி கட்சி துவங்கினால் தனி ஆட்சி செய்யலாம் என்று ராகுல் காந்தி விஜயிடம் கூறினார். ராகுல் காந்தி கூறியதன் பிரதிபலிப்பாக தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். நான் ஏற்கனவே காங்கிரஸில் இருந்ததால் இதுப்பற்றி எனக்கு முன்னதாகவே தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.