மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்?: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் ஏற்பட்டதாக மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை, நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

குறிப்பிட்ட காலத்துக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கவேண்டும் என்று உத்தரவிடக்கோரி பாஸ்கர் என்பவர் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள்? என சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

அதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தை மத்திய அரசு காரணம் காட்டிய நிலையில், கொரோனா 2022ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனைக் காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்ததுடன், மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.