சீமான் மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் உத்தரவின் பேரில் சென்னை பட்டாபிராம் போலீசார் நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருக்கிறார். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது சர்ச்சையானது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவர் பாடிய பாடலால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சாட்டை துரைமுருகன் கைதுக்கு காரணமான குறிப்பிட்ட அந்த சொல்லை சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி கைது செய்து பாருங்கள் என சவால் விட்டார். இதையடுத்து சீமான் மீது பல போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

சீமானுக்கு எதிராக சென்னை பட்டாபிராம் பகுதியைச சேர்ந்த அஜேஸ் என்பவர் கடந்த ஜூலை 16ம் தேதி போலீசில் புகார் அளித்தார். பட்டாபிராம் போலீசில் அவர் அளித்த புகாரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அந்த புகாரில் ‛‛மறைந்த தலைவர் கருணாநிதி குறித்துப் பாடிய பாடல் தீண்டாமையை வலியுறுத்தும் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். மேலும் கருணாநிதியை இழிவுப்படுத்தினார். கருணாநிதியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு மீண்டும் பாடலாக பாடியும் பேசியும் இருக்கிறார் சீமான். இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாநில பட்டியலின ஆணையத்திற்கு அஜேஸ் புகாரளித்தார். இதையடுத்து இந்த புகாரை பரிசீலித்த பட்டியலின ஆணையம், பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது. அதுமட்டுமின்றி சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ஆவடி காவல் ஆனையகரத்திற்கு எஸ்சி – எஸ்டி ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சீமானுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.