மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் பள்ளிக் கல்வித் துறைக்கான மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. நிதியை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒப்புக்கொண்டபடி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்து இடவேண்டும் என்று பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தனிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளை பறித்து மையத்தில் அதிகாரத்தை குவித்து கொள்ளும் ஏதேச்சதிகார வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பாஜக ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் பாஜக ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சகம் சமக்ர சிக்ஷா திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை நிறுத்தி வைத்து, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால் நிதி ஒதுக்க முடியாது என மிரட்டி, நிர்பந்திக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், “பிரதமரின் எழுச்சி மிக்க இந்தியப் பள்ளிகள்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இதன் வழியாக இந்தி மொழியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் தேசிய கல்விக் கொள்கை திருத்தியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது அரசின் கருத்து மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். இதன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வரின் கடிதத்தை நேர்மறையாக பரிசீலித்து, உதவாமல் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சரின் கடிதத்துக்கு விளக்கம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை பறித்து, இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை வெளிப்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.