செப். 14-ம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா: பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 14-ல் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேமுதிகவின் 20-ம் ஆண்டு தொடக்க தினம் செப்டம்பர் 14-ம் தேதி வருகிறது. அந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும். அதன்படி, பத்மபூஷண் விருதுக்காக தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை கவுரவிக்கும் விழா, கட்சியின் 20-ம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்தின் 72-வது பிறந்த நாள் விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்து முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த விழாவின்போது கட்சியின் கொடியை ஏற்றி, பொது மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு காவல் துறையின் அனுமதியை முறையாக பெற்று மாலை வேளையில் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.