முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.5 வரை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தி்ல்பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (செப்.5) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் செந்தில்பாலாஜி காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து அவரது நீதிமன்ற காவலை நாளை (செப்.5) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த வழக்கில் சிட்டி யூனியன் வங்கி கரூர் கிளையின் தலைமை மேலாளராகப் பணியாற்றிய ஹரிஷ்குமார், நீதிபதி அல்லி முன்பாக ஆஜரானார். அவரிடம் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கவுதமன் குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணை நேற்று நிறைவடையாததால் வழக்கை நீதிபதி நாளைக்கு (செப்.5) தள்ளிவைத்துள்ளார்.