ஆளுநர் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: கனிமொழி

மாநில பாடத் திட்டம் விவகாரத்தில், தங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. அரசு எந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பினாலும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிப்பாகிறது என தமிழக அரசு குற்றம்சாட்டியது. அதே சமயம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையையே படிக்காமல் புறக்கணித்த நிகழ்வும் சட்டமன்றத்தில் நடைபெற்றது. மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழக அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். அத்துடன், தமிழக கல்விக் கொள்கையை தாழ்த்தியும், தேசிய கல்விக் கொள்கையை உயர்த்தியும் தொடர்ச்சியாக பேசி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

அண்மையில் நடந்த பள்ளி நிகழ்வில் பேசிய ஆளுநர், தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என்று விமர்சனம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆளுநருக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் உள்ளது என்றும், மாநில பாடத் திட்டம்தான் சிறந்தது என ஆளுநருக்கு நிரூபிக்கத் தயார் எனவும் கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியதாவது:-

மாநில பாடத் திட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்துள்ளாரா என்று எனக்கு தெரியவில்லை. எங்களைப் போன்றவர்கள் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து வந்தவர்கள் தான். நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்பட பலரும் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து வந்தவர்கள் தான்.

கல்வியில் தற்போது இந்தியாவுக்கே வழிகாடியாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. உயர் கல்வியில் 30 ஆண்டுகளில் அடைய வேண்டும் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி தற்போதே முன்னேறியுள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆகவே, நமக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.