தற்போது ஆர்.என்.ரவி ஆளுநரே கிடையாது: ஆர்.எஸ்.பாரதி

தற்போது ஆர்.என்.ரவி ஆளுநரே கிடையாது என்றும், அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது எனவும் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதுமுதல் தற்போது வரை ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக முட்டல் மோதல் நிலவி வருகிறது. சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதே சமயம் ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்தது என ஆளுநரின் செயல்பாடுகள் சர்ச்சையை உண்டாக்கின. சமீபத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஒப்பிடும்போது மாநில பாடத் திட்டம் மோசம் என ஆளுநர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்த, அதற்கு கண்டனங்கள் வலுத்தன.

இந்த நிலையில் சென்னையில் திமுக மாணவரணி நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

பதவிக் காலம் முடிந்துவிட்டாலும் ஆளுநர் பதவியில் அமர்ந்துள்ள ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய காரியங்களை செய்து வருகிறார். இப்போது, ஆர்.என்.ரவி ஆளுநரே கிடையாது. அவருடைய பதவிக் காலம் முடிந்துவிட்டது. இப்போது முழு நேர ஆளுநர் கிடையாது. பேசக்கூடாததை எல்லாம் ஆளுநர் பேசி வரும் நிலையில், இப்போதுதான் மாணவர்களுக்கு மிக முக்கியமான பணி உள்ளது.

1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, இதுவரை ஆட்சிக்கு வர முடியாத நிலை உள்ளது. அதற்கு காரணம் அன்றைய மாணவர் சமூகம் போட்ட விதைதான் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அவ்வளவு சக்தி வாய்ந்தது மாணவர் சமூகம். நானும் 1975ஆம் ஆண்டு திமுக மாணவரணி இணைச் செயலாளராக பதவி வகித்தேன். இவ்வாறு அவர் கூறினார்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை திட்டமிட்ட செயல் என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பள்ளி கல்வியின் தரம் குறித்து பேசியதற்கும், இந்த நிகழ்வுக்கும் பின்னணி உள்ளது என்றும், அதனை அறிந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.