விமர்சனங்களுக்கு தொண்டர்கள் எதிர்வினையாற்ற வேண்டாம்: திருமாவளவன்!

அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்ற வேண்டாம் என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியதாவது:-

அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை தேசிய அளவில் அணுகுகிறோம். இடஒதுக்கீடு தொடர்பாக விசிக எத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, போராடி வருகிறது என்பதை அரசியல் களத்தில் உள்ள அனைவரும் நன்கு அறிவர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சில குறைபாடுகள் குறித்து தெளிவு பெறவே சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். சீராய்வு மனுவில் தமிழக அரசை சேர்க்கவில்லை. ஆனால், உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக விசிகவுக்கு எதிரான அவதூறுகளை சிலர் பரப்புகின்றனர். விசிகவை கண்டித்து ஒரு சிலபட்டியலின அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளன.

விசிக மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவர்கள், உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும் இயக்கங்களையோ, தலைவர்களையோ கண்டித்தது மில்லை, விமர்சித்ததுமில்லை, இப்படி ஆர்ப்பாட்டமும் நடத்தியதில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சங்பரிவார்களோடு கைகோர்த்திருக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக விசிகவினர் யாரும் எதிர்வினையாற்ற வேண்டாம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.