மது விலக்கு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பாமகதான்: ராமதாஸ்

மது விலக்கு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பாமகதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கள்ளக் குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்திய 65 பேர் வரை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தன. மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் அக்டோபர் 2ம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. மதவாத, சாதியவாத கட்சிகளைத் தவிர, மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மது விலக்கு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பாமகதான். மது விலக்கு வேண்டும் என கடந்த 44 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. 1972ஆம் ஆண்டு திமுக அரசு மது விலக்கை ரத்து செய்தபோது, 94 வயதில் கொட்டும் மழையில் ராஜாஜி, கலைஞரின் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனாலும் மது விலக்கை ரத்து செய்தார். தற்போது தமிழகத்தை ஆளும் திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளில் மது ஒழிப்புக்காக 200க்கும் மேற்பட்ட போராட்டங்களை நான் நடத்தியுள்ளேன். அனைத்து மாவட்டங்களிலும் பாமக மகளிரணி மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. 7,200 டாஸ்மாக் மதுக் கடைகளை இருந்த நிலையில், அதனை 4,800 ஆக குறைத்தது பெருமை பாமகவையே சேரும்.

தமிழகத்தில் காலை 8 மணி நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து 16 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வந்தது. அதனை 10 மணி நேரமாக குறைத்தது பாமகதான். 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என பாமக அறிவித்த பின்பே திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் வலிறுத்தத் தொடங்கின. தமிழகத்தில் எப்போதும் மதுவுக்கு எதிராக போராடி வருவது பாமகதான். தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர பாமகவால் மட்டும்தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் விசிக உள்ளது. இப்போதாவது தமிழகத்தின் மிக மோசமான பிரச்னை மதுதான் என்பதை திருமாவளவன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியே” என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.