அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி செயல்படுகிறார்: ஆர்.பி.உதயகுமார்!

“அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி செயல்படுகிறார். அவருக்கு எப்போது முதல்வர் அதிகாரம் வழங்கப்பட்டது?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். முதல்நாள் இரவு தயாரிக்கப்பட்டு டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டதால் பிரியாணி கெட்டுப்போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரை மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் இன்று (செப்.13) சந்தித்து நலம் விசாரித்தார். அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “மதுரை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது, பிரியாணியும் வழங்கப்பட்டது. சிலர் அதை மாலை வரை வைத்திருந்து உண்டதாலும், சிலருக்கு சேராததாலும், பள்ளியிலிருந்து வந்த குழந்தைகளுக்கு கொடுத்ததாலும் பாதிக்கப்பட்டனர். தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி பார்சல் வழங்கப்பட்டது. அதில், 36 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம், கள்ளிக்குடியில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். விருதுநகரில் சிகிச்சை பெறுவோரும் இன்று சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1,000 நிதி உதவியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விருதுநகர் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அவசர கதியில் மக்களுக்கு உணவை அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்க முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கவனமாக செயல்பட வேண்டும். யார் உணவு அளித்தாலும் எச்சரிக்கையோடும் கவனத்தோடும் கையாள வேண்டும். கொரோனோ காலத்தில் லட்சக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரையில் 9 மையங்களில் 3,200 கொரோனா தொற்றாளர்களுக்கு 5 மாதம் பாதுகாப்பாக உணவளிக்கப்பட்டதை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான். இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை. பூரண மது விலக்கு கோரி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகளும், பழனிசாமி முதல்வராக இருந்தபோது 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது அதிமுகவுக்கு திருமாவளனன் விடுத்துள்ள அழைப்பு தமிழக அளவில் பெரும் அதிர்வலையை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் ஒருவர் மாநாடு நடத்தினால் தேவையில்லாத கேள்விகள் கேட்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் மதுரையில் மாநாடு போன்று நிகழ்ச்சி நடத்தினார். அவர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற வருவாய்த்துறை அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்கிறார்கள். முதல்வர் தான் அனைத்துத் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த முடியும். ஆனால், ஒரு துறையின் அமைச்சர் எவ்வாறு அனைத்துத் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தலாம்?அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி செயல்படுகிறார். அவருக்கு எப்போது முதலமைச்சர் அதிகாரம் வழங்கப்பட்டது? முதல்வர் அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை அவருக்காக செயல்படுத்துவது தவறான முன்னுதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.