இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி: மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு!

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, சீக்கியர்களின் உரிமைப் போராட்டம் குறித்து பேசினார். சீக்கியர்கள் தலைப்பாகை, கட்டா அணியவும் குருத்வாரா செல்லவும் இந்தியாவில் உரிமை உண்டா? என கேள்வி எழுப்பி இருந்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு, சீக்கியர்களுக்கு என இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனிநாடு கோருகிற பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பன்னூன் ஆதரவு தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையானது. ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியை இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி என விமர்சித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு.

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

ராகுல் காந்தி பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளில் செலவிடுகிறார். வெளிநாட்டில்தான் ராகுல் காந்தியின் நண்பர்களும் குடும்பத்தினரும் உள்ளனர். ராகுல் காந்திக்கு இந்த தேசத்தின் மீது எந்த ஒரு அன்பும் இல்லை. எப்போது வெளிநாடு சென்றாலும் இந்தியாவுக்கு எதிராக பேசுவதுதான் ராகுல் காந்தியின் வழக்கம். ராகுல் காந்தி இந்துஸ்தானியே அல்ல. தற்போது பிரிவினைவாதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் ராகுல் காந்தி. இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதிகள் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். இந்தியாவால் தேடப்படுகிற அதிமுக்கிய குற்றவாளிகள் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். ராகுல் காந்தி பேசியது சீக்கியர்களுக்கு எதிரானது. வெடிகுண்டுகள் தயாரிப்பதில் வல்லுநர்கள்தான் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய எதிரியான பன்னூன் தலைக்கு விலை வைத்துள்ளது. ஆனால் அந்த பிரிவினைவாதிதான் ராகுல் காந்தியை ஆதரிக்கிறார்.

இந்தியாவின் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. அது பலன் தரவில்லை. ஆகையால் சீக்கியர்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. இதே ராகுல் காந்தியின் குடும்பத்தின் சதியால்தானே சீக்கிய பெண்கள் தெருக்களிலேயே பலாத்காரம் செய்யப்பட்டு வீசப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ராகுல் காந்திதான் இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கூறியுள்ளார்.