உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார் .
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு, உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்க வேண்டும். குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 40 பேர் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அங்கு பெய்த கனமழையால் தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், ஆதி கைலாஷ் கோவிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் மலை பகுதியில் சிக்கி, கீழே வரமுடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தின் சிதம்பரத்தை சேர்ந்த 30 யாத்திரீகர்கள் ஆதி கைலாஷ் கோவிலுக்கு சென்றபோது நிலச்சரிவினால் சிக்கியுள்ளதால் அவர்களை பத்திரமாக மீட்க அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உணவு, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய-மாநில அரசுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.