சென்னையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை!

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி இன்று (செப்டம்பர் 18) காலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று (செப்டம்பர் 18) தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற காவல் துறையினர் காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர் தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, காக்காதோப்பு பாலாஜி மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார். உயிரிழந்த காக்காதோப்பு பாலாஜியின் உடல் பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், முதல்வர் வசம் உள்ள காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. கள்ளக்குறிச்சி விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்த நிலையில் காவல்துறையில் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை பலர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

அப்போது சென்னை மாநகருக்கு புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அருண் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி ஆகும். சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று பேசினார்.

அருண் ஐபிஎஸ் பதவியேற்ற பின்னர் சென்னையில் நடைபெறும் இரண்டாவது என்கவுண்டர் இதுவாகும். இதற்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.