அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து விட்டனர். அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி, நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் நீக்கப்பட்டவர்கள் தான்.. அதிமுக இப்போது இணையும், டிசம்பரில் இணையும் எனும் என்ற செய்தி தவறானது. பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதியானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கடந்த 2022ம் ஆண்டு நீக்கப்பட்டனர். கடந்த 2022ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானங்கள் அப்போது அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அதிமுக கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் அணி இணைய உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் ஒரு குழுவையும் சிலர் அமைத்தனர். புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகர், கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் அந்த குழுவில் உள்ளனர். இவர்கள் கடந்த மே மாதம் கூறும் போது, தமிழக அளவில் 234 தொகுதிகளிலும் கட்சியை ஒருங்கிணைக்க பொறுப்பாளர்களை நியமித்து செயல்பட இருக்கிறோம். முதற்கட்டமாக 10 பேரை நியமித்துள்ளோம். நான்காக பிரிந்து உள்ள பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைக்கும் முயற்சியில் இறங்கினோம். அவர்கள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து பேசினால் இப்பிரச்சினை நிச்சயம் தீரும் என்றார்கள்.

இதனிடையே அதிமுக குறித்து பல்வேறு ஊகம் சார்ந்த செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த ஊகங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னை ஜெஜநகர் மேற்கு பதியில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுபேர் எதிர்ப்பு, 9 பேர் எதிர்ப்பு, 11 பேர் எதிர்பபு என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியது. ஆனால் ஒருவர் கூட எதிர்ப்பு இல்லை. எங்கள் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கிறது.. வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். அதுபோல் ஒரு சில பத்திரிக்கைகளை தவிர பெரும்பாலான பத்திரிக்கைகளில் அண்ணா திமுக இணையும், அண்ணா திமுக நாளை இணையும்.. அண்ணா திமுக டிசம்பரில் இணையும் என்று எழுதுகிறார்கள்.. எங்கய்யா இணையுது.. அண்ணா திமுக தெளிவாக இருக்கிறது.. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி, நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் நீக்கப்பட்டவர்கள்.. நீக்கப்பட்டவர்கள் தான்.. இனியாவது பத்திரிக்கை ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாதீர்கள்.. இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அடியோடு இன்றைக்கு அழிந்து விட்டனர். இது தொண்டர்களால் நிர்ணயிக்கப்படுகின்ற கட்சி.. தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்த கட்சி.. தொண்டர்களால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.