செஸ் ஒலிம்பியாட்டில் வரலாறு படைத்த இந்திய அணி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணியின் ஆடவர் பிரிவும், மகளிர் பிரிவும் தங்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசியை வென்றதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் உறுதியானது. இந்திய ஆடவர் அணியில் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா ஆகியோரும் உள்ளனர். அதேபோல மகளிர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவினர். வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இது செஸ் ஒலிம்பியாடில் இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாக அமைந்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தளத்தில் முதலல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது முதல் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 இல் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு சிறப்பான பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹங்கேரியில் இருந்து நம்பமுடியாத செய்தி! 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024-இல் தங்கம் வென்று இந்திய அணி தமது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள். ஆர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகிய ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.