செந்தில் பாலாஜி பிணையில் வந்தது தியாகமா?: சீமான்!

“அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது தியாகம் என்கிறார்கள். திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அவர் செய்தது ஊழல் குற்றச்சாட்டாகிவிடுமா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு, என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை” என்றார்.

அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து முதல்வர் ஸ்டாலின், தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலைவைத்து விற்பனை செய்வது, 10 ரூபாயைக் கூட்டி விற்பது, நேரம்காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச்சரக்கு ஓட்டுவது, இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான், அவருடைய தியாகத்தைப் போற்றியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக, வ.உ.சி போல சிறையில் செக்கிழுத்தவர்கள், 9-10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து, தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன? இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையைக் குடைந்த விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது.

வீரதீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவையெல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார்? திமுக. அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே, அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது, வருக வருக, வீரதீர தியாக செயல் என்று கூறுவதும் திமுகதான். திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் நல்ல அமைச்சர், அவ்வளவுதான்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.