ராவணனாக தெரிந்த செந்தில் பாலாஜி இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா?: ஆர்.பி. உதயகுமார்!

செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய அதிமுக சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்தும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் சிக்கந்தர் சாவடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார் பேசியதாவது:-

எதிர்க்கட்சியாக இருந்தபோது கனிமொழி தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரித்துவிட்டனர் என்று கூறினார். தற்போது ஸ்டாலின் ஆட்சியில் விதவைகள் அதிகரித்தது மட்டுமல்லாது, மதுவினால் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த முடியவில்லை, முதலமைச்சர் உண்மையான உத்தரவு போடுகிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதையெல்லாம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இதே செந்தில் பாலாஜியை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் பத்து தலை ராவணன் என்றும், அவரது தம்பியை அசோகன், கும்பகர்ணன் இருவரும் அரக்கர்கள் என்று கூறினார். ஆனால் இன்றைக்கு தியாகிகள் என்று கூறுகிறார். அன்றைக்கு ராவணனாக தெரிந்தவர் இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா?அதிமுகவில் உள்ள ரெண்டு கோடி தொண்டர்களும் ராமனாக இருந்து எடப்பாடியாருக்கு பாட்டாபிஷேகம் சூட்டுவார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக்க யாரும் வாக்களிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் நூலிழையில் தான் வாய்ப்புகளை இழந்தோம். இதே 2011 ஆண்டில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரவில்லை தற்போது ஆட்சிக்கு வந்துவிட்டனர். நாங்கள் இன்றைக்கு எதிர்கட்சியாக இருக்கிறோம் நிச்சயம் 2026 தேர்தலில் ஆளுங்கட்சியாக வருவோம்.

செந்தில் பாலாஜி எதற்காக உள்ளே சென்றார் என்று அனைவருக்கும் தெரியும். திமுகவில் மிசா போன்ற சட்டங்களில் பாடுபட்டும், ஸ்டாலினுக்காக உயிரை கொடுக்க நினைத்தவர்களை ஸ்டாலின் பார்த்ததுண்டா? அதேபோல் திமுக மூத்த தலைவர்கள வேலு, நேரு, பெரியசாமிக்கு இல்லாத மரியாதையை தற்போது செந்தில் பாலாஜி கொடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிமுகவை ஒருவரும் கைவிட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:-

திமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி அதன் மூலம் ஐந்தாண்டு 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் என்று கூறினார்கள் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறினார்கள் இதுவரை 6000 தான் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்வோம் என்று கூறினார்கள் அதையும் செய்யவில்லை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாள் வேலை வாய்ப்பு திட்டமாக செயல்படுத்தபடும் என்று கூறினார்கள் . மேலும் அம்மா ஆட்சி வழங்கப்பட்ட மடிக்கணி திட்டத்தை இதுவரை வழங்கவில்லை. அந்த திட்டம் நடைமுறைக்கு உள்ளதாக ரத்து செய்யப்பட்டதா என்று கூட தெரியவில்லை. இது குறித்து கேட்டால் உரிய பதிலை அளிக்க மறுக்கிறார்கள். அதேபோல் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.

இன்றைக்கு 40 மாத ஆட்சியில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் நடமாட்டத்தின் நெட்வொர்காக தமிழகம் உள்ளதாக கூறப்படுகிறது .தற்போது கூட போதை பொருள் பிடிபட்டுள்ளது சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் மூலம் செய்யப்பட்டதாக தகவல் கூறி வருகிறார்கள்.

அதேபோல முல்லைப் பெரிய அணை நீர்மட்டம் 146 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த அம்மா உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பை பெற்று தந்தார் அதையும் நிறைவேற்றவில்லை. தற்பொழுது கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. அதே போல் ஸ்டாலின் வெளிநாடு சென்றார். இது குறித்து எடப்பாடி வெள்ளை அறிக்கை கேட்டார். ஆனால் அது குறித்து ஏதும் வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவுறுத்தலின்படி திமுக அரசை கண்டித்து கழக அம்மா பேரவையின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் வருகின்ற ஒன்பதாம் தேதி மதுரை பழங்காநத்தில் நடைபெறுகிறது.

தற்போது முதலமைச்சர் டெல்லி சென்று மூன்று கோரிக்கையை வைத்ததாக கூறுகிறார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக உள்ளது. அதன் பயன் பிரதமர் கையில் தான் உள்ளது என்று கூறுகிறார். என்ன கோரிக்கை கல்வி நிதி, ஜிஎஸ்டி நிதி மெட்ரோ ரயில் நிதி ஆகியவற்றை சொல்லி வலியுறுத்தினாரா இல்லை தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக்க சென்றாரா? செந்தில்பாலாஜி வழக்குகாக சென்றாரா? தற்பொழுது கூட உதயநிதியை துணை முதலமைச்சராக ஏமாற்றம் இருக்காது மாற்றம் வரும் என்று கூறுகிறார். இது யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. தமிழக மக்களின் மூன்று கோரிக்கையாக சென்றதாக கூறுகிறார் தமிழக மக்களுக்காகவா? இல்லை உதயநிதி துணை முதலமைச்சராக்க நேரம் கேட்கவா? இதற்குரிய விளக்கத்தை இன்னும் சொல்லவில்லை.

இன்றைக்கு திமுக கூட்டணி கட்சிகள் மீது ஸ்டாலின் அச்சம் கொண்ட காரணத்தால், ஏற்கனவே திமுக பவள விழா நடைபெற்றது தற்போது மீண்டும் பவள விழாவை நடத்துகிறார். கூட்டணி கட்சிக்காகத்தான் இந்த பவள விழாவை மீண்டும் நடத்துகிறார். திருமாவளவன் தெளிவான கருத்து சொல்லிவிட்டார். ஆகவே மக்கள் உரிமைகள், மக்களுக்காக உழைக்க கூடிய கட்சிகள் எல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் அணிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.