ஓசூர் அருகே டாடா தொழிற்சாலையில் தீ விபத்து!

ஓசூர் அடுத்த கூத்தனப்பள்ளி பகுதியில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திம்ஜேப்பள்ளி ஊராட்சி கூத்தனப்பள்ளி பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இந்நிலையில் இன்று (செப்.28) காலை தொழிலாளர்கள் ஷிப்ட் முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது, அங்கிருந்த ஆனோ கெமிக்கல் பிளாண்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த 3 ஆயிரம் தொழிலாளர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சுமார் 4 மணி போரட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்க்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் பொருட்கள் சேதம் குறித்து ராயக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் டாடா தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் விடுமுறை அளித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாடா தொழிற்சாலை பேருந்து கெலமங்கலம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலைக்கு சொந்தமான 7 பேருந்துகளை அடித்து சேதப்படுத்தினர். இந்நிலையில், தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டாடா தொழிற்சாலையில் அடுத்தது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.