சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்: மனோ தங்கராஜ்!

சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததது. இதனால் தமிழக அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தான் நேற்று தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பதிவில், அமைச்சராக பதவி வகித்த போது தான் செய்த பணிகளை பட்டியலிட்டு மனநிறவை தருவதாக கூறியுள்ளார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது. 2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!. மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.