தார்மீக உரிமையுடன் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்: மாணிக்கம் தாகூர்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், 108 பயனாளிகளுக்கு ரூ.10.24 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வழங்கினார்.

அதன் பின்பு செய்தியாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், தார்மீக உரிமை என பேசும் பாஜக அதே தார்மீக உரிமை நிர்மலா சீதாராமனுக்கு இல்லையா? தார்மீக உரிமையுடன் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும், அப்படி பதவி விலகி அனைவருக்கும் முன் உதாரணமாக நிர்மலா சீதாராமன் இருக்கப் போகிறாரா, இல்லை மற்றவர்களுக்கு தான் தார்மீக உரிமை தனக்கு வந்தால் அது தக்காளி சட்னியா என கூறப்போகிறாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நிர்மலா சீதாராமன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் எனவும், கூறினார்.

சிறையில் இருந்து வெளிவந்த செந்தில் பாலாஜி திமுக கட்சியில் ஒரு முக்கியமான பொறுப்பில் உள்ளவர். பாஜக பழிவாங்கும் நடவடிக்கையிலிருந்து அவர் வெளியே வந்த காரணத்தினால் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளதை காட்டுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கூறுவதாகவும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும், உண்மையில் ஆராய வேண்டிய விஷயம் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அதிமுக உண்மையாக எதிர்க்கட்சி அரசியல்தான் செய்கிறதா?, மக்கள் பிரச்சினையை பேசுகிறார்களா என அந்த கட்சிக்காரர்களுக்கு தெரியவில்லை. அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாரத்தில் நான்கு நாட்கள் எதிர்க்கட்சி அரசியலுக்கு விடுமுறை விட்டு விடுவதாகவும் விமர்சித்தார்.

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் செயல்படுவதால் மீனாம்பிகை பங்களா வழியாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறினார்.

தீபாவளி நெருங்க நெருங்க உற்பத்தி செய்து வைத்துள்ள இடங்களில் இது போன்ற விபத்து நடப்பதை தவிர்க்க வேண்டும் விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விபத்தில்லா பட்டாசு தொழில் நடக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.