காவிரி பிரச்னையில் கருத்து சொல்லவே விஜய் பயப்படுகிறார்: பி.ஆர்.பாண்டியன்!

காவிரி பிரச்னையில் கர்நாடகாவை எதிர்த்து கருத்து சொல்லவே விஜய் பயப்படுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நீர் ஆதார பிரச்சனைகள் தீவிரம் அடைந்துள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ராசிமணல் அணை கட்டுவது குறித்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கோரினோம். அனைவரும் ஒத்த கருத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இதுகுறித்து சந்தித்து பேசினோம். திட்டம் சாதகமான ஒன்றுதான் அதனை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பி வந்ததும் கொள்கை முடிவு அறிவிப்பார் என உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் கொள்கை நிலையை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணை குறித்த ஆய்வு செய்வதற்கு இரு குழுக்களை அமைத்து மாதம் ஒருமுறை ஆய்வு செய்து அணை உறுதித்தன்மையை உறுதி செய்து வருகிறது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் முல்லைப் பெரியாறு அணை ஆய்வு செய்வதற்கு புதிய குழு அமைத்துள்ளது இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனை திரும்ப பெற வேண்டும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது, கட்சி தொடங்குவது அவரது உரிமை. அரசியல் சட்டப்படி அனைவரும் கட்சி துவங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் கர்நாடகா, கேரளாவிற்கு எதிராக பேச மறுக்கிறார். தமிழக நீராதார உரிமைகள் குறித்த தனது நிலைபாட்டை தெளிவுபடுத்தவில்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார். இந்த நிலையில் விஜய் கட்சி தொடங்குவது ஏற்கத்தக்கது அல்ல. முதலில் மக்கள் பிரச்சினைகளில் தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநாட்டிற்கு முன்னதாக விவசாயிகள், மக்களுக்கான பிரச்சனைகளில் தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்தி கட்சி துவங்க முன்வர வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.