தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை, தேசிய பிரச்சினையாக கருத வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்த இலங்கை கடற்படை, 29-ம் தேதி மீண்டும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 17 தமிழக மீனவர்களை சிறைபிடித்ததுடன், அவர்களது 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றாலும், தமிழக மீனவர்களை பொறுத்தவரை பழைய நிலையே தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருதி, இலங்கை அதிபரின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்களின் உயிருக்கும், தொழிலுக்கும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுவது என்பது எதேச்சையாக நடக்கக் கூடியது அல்ல. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கக் கூடிய செயலாகும்.

இதுபோன்று வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த கவலைக்குரியது. எனவே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கவும் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.