விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மதுவிலக்கு சட்டம், தேசிய கொள்கை என மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் ஆர்.சுதா, சிபிஎம் சார்பில் வாசுகி, சிபிஐ சார்பில் ஆனி ராஜா, மதிமுக சார்பில் ரொஹையா ஷேக் முகமது,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஏ.எஸ்.ஃபாத்திமா முசபர், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முத்துலட்சுமி வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாசித்தார்.

தீர்மானங்கள் பின்வருமாறு:-

* மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

* மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும்.

* மதுவிலக்கினால் பாதிக்கப்படும் மாநிலத்திற்கு கூடுதல் நிதியளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மதுவால் மனித வளம் பாதிக்கப்படுவதால் மதுவிலக்கு விசாரணை ஆணையம் கொண்டு வர வேண்டும்.

* மதுவிலக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்படியாக கடைகளை மூட வேண்டும்.

* மது ஒழிப்பிற்கான விழிப்புணர்வு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

* அரசியலமைப்பு சட்டம் 47ல் கூறியபடி மதுவிலக்கிற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.

* குடி நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய மையங்களை அரசு அமைக்க வேண்டும்.

* மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும்.

* டாஸ்மாக் மதுவிற்பனை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்.

* தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். இதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

* மதுவிலக்கு பரப்பு இயக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கேடாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல. அனைத்து தரப்பினரின் முதன்மையான கடமை ஆகும்.

இவ்வாறு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.