மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும்: சீமான்

பரமக்குடி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பரமக்குடியிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பிஞ்சுக் குழந்தைகளுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தரும் அறிவுக் கருவறையாக விளங்கும் கல்விக்கூடங்களிலேயே பாலியல் கொடுமைகள் நடப்பதாக வெளிவரும் அண்மைக்கால செய்திகளானது பெரும் வேதனையைத் தருகின்றன.

அறவுணர்வும், ஒழுக்கம் சார்ந்த சிந்தனையும் அற்ற குற்றச்சமூகமாக இச்சமூகம் மாறிப்போனதன் விளைவை நாள்தோறும் காண்கிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நிலவும் மிதமிஞ்சியப் போதைப்புழக்கமும், மாணவிகளுக்கு விளைவிக்கப்படும் பாலியல் கொடுமைகளும் எதிர்கால தலைமுறை குறித்த அச்சத்தை தருகின்றன. பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ச்சியாக நிகழும் நிர்வாகச் சீர்கேடுகள் அத்துறையின் இழிநிலையை எடுத்துக்காட்டுகின்றன.

பரமக்குடி பள்ளிக் கூடத்தில் விலங்கியல் ஆசிரியராகப் பணிபுரியும் வெங்கடேசன் என்பவரே அங்குள்ள மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருப்பது பள்ளியினுடைய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

கல்விக் கூடங்களில் நிகழும் பாலியல் ரீதியான வன்முறைகளைத் தடுக்க தமிழக அரசு விழிப்போடும், முன்னெச்சரிக்கை உணர்வோடும் இருக்க வேண்டிய அவசியமாகும். இத்தகையக் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எவராயினும் எவ்வித பாகுபாடுமில்லாது உரிய சட்டநடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய ஆசிரியர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கைதுசெய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.