திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்: எச்.ராஜா!

“போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

இது குறித்து எச்.ராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்து மது விற்பனையை அறிமுகம் செய்த கட்சியோடு கூட்டணி வைப்பார். மதுபான ஆலை உரிமையாளர்களுடன் தேர்தல் பிரச்சார மேடையில் கைகோப்பார். மதுபான ஆலை உரிமையாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வார். ஆனால், அவரே மது ஒழிப்பு மாநாடும் நடத்துவார்.

போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருப்பது உளுந்தூர்பேட்டையில்… ஆனால் அவர் கூட்டணி வைத்திருப்பதோ தமிழகத்தில் மது விற்பனையை தொடங்கி வைத்த கோபாலபுரத்தில்.. இது என்ன மாதிரியான அரசியலோ தெரியவில்லை?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.