சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளை கைப்பற்றும்: தயாநிதி மாறன்!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக யாருடைய தயவும் இல்லாமல் 200 தொகுதிகளை கைப்பற்றும் என தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

விருதுநகரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் அக்கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் தென்மண்டல ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச்செயலாளரும் திமுகவின் நாடாளுமன்ற துணைத் தலைவருமான தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக நடத்தப்பட்ட விளையாட்டுகளின் புகைப்பட கண்காட்சியினை தயாநிதி மாறன் பார்வையிட்டார். தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டு இருந்த பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், எதிர்காலத்தில் திமுகவை தாங்கிப்பிடிக்கும் பொறுப்பு இளைஞர்களுக்குத் தான் உண்டு. எனவே இளைஞர்களின் பங்களிப்பு திமுகவிற்கு அவசியமாகிறது என்றார். திமுகவை அண்ணாவிற்கு பின்னர் கலைஞர் அவருக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பின்பாக உதயநிதி ஸ்டாலின் திமுகவை கட வழிநடத்துவார் என்றார்.

அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி. கூறியதாவது:-

இந்தியாவில் பெரிய அளவில் பெட்ரோல் மற்றும் நிலக்கரி வளங்கள் கிடையாது. ஆனால் மனித வளம் அதிகமாக உள்ளது. இந்த மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுக அரசு. பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதோடு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியை அதிகம் தமிழகத்திற்கு கொண்டு வந்தது திமுக அரசு.

பள்ளியில் இடைநிற்றலே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் காலை உணவு மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறோம். தமிழகத்தை நோக்கி அதிகம் தொழிற்சாலைகள் வருவதற்கு காரணம் படித்த இளைஞர்கள் அதிகம் இருப்பதால் தான். புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதன் நோக்கம் மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வருவது தான்.

இன்னும் 15 மாதங்களில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் அறிவிப்பு. மேலும் இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் திமுகவின் இளைஞர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணியினர் சமூக ஊடகங்களை பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டும். திமுகவினர் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் யாருடைய தயவும் இல்லாமல் திமுக 200 தொகுதிகளை கைப்பற்றும். திமுகவை வலுப்படுத்த சமூக ஊடகங்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.