சென்னை விமான படை சாதனை நிகழ்வு வேதனை நிகழ்வாக மாறியது: ஆதவ் அர்ஜுனா!

ஆளும் திமுக அரசிற்கு எதிராக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அடுத்தடுத்து கருத்து கூறி வருவது சர்ச்சையாகி வருகிறது. இம்முறை சென்னை விமான படை சாகச நிகழ்வை கையிலெடுத்துள்ளார். எதிர்பாராத விதமாக 5 பேர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

மெரினா கடற்கரையில் இந்திய விமான படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது. கொளுத்தும் வெயிலில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடும் போது, அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதனால் உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். இந்த நிகழ்வில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஏற்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை.

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது. அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்தது. இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தவில்லை.

அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது. எந்த அரசு தன் நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.